Wednesday, November 4, 2009

மரணத்திற்கு பிறகு ???


"மரணம்" - எல்லா உயிர்களும் அடைய விரும்பாவிடிலும் பெற்றே ஆக வேண்டிய முடிவு.

உண்மையில் மரணத்தின் பின் என்னதான் ஆகிறோம்? இந்த கேள்விக்கு கண்டிப்பாக "அறிவியல்" இடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது இயாலாத ஒன்று என்று நினைத்த நான், சில ஆன்மிக புத்தகங்களை உதவிக்கு நாடினேன். பல்சுவையான பதில்கள் எனக்கு கிடைக்க ஆரம்பித்தன.

கிறித்துவ மதம் இதற்கு சொர்க்கம் (Heaven), நரகம் (Hell) என்ற இரு பிரிவுகளை கை காட்டியது. பாவம் (Sin) செய்தவர்கள் நரகம் சென்று பாவத்திற்கு ஏற்ற தண்டனைகளை பெறுவதாகவும், சொர்க்கம், புண்ணியங்களின் பலன்களை ஏற்கும் இடமாகவும் காட்ட பட்டது. இறைவனின் அருள் பெற்றவர்கள் அழிவில்லா தன்மை (Immortality) அடைவதாகவும் (சில குறுப்பிட்ட பிரிவினர் மட்டும் இதை நம்புகின்றனர்) உள்ளது. சொர்கமும், நரகமும் மறு பிறப்புக்கு முதற்பட்ட நிலைகளென குறுப்பிட படுகிறது.

இஸ்லாமிய மதமும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துகளையே சொல்வதாக கருதுகிறேன். இங்கே சொர்க்கம், "ஜன்னா" (Jannah) என்றும், நரகம் "ஜஹனம்" (Jahannam) என்றும் பெயரிட பட்டுருக்கிறது."மாலிக்" என்ற நபர், நரகத்தை (Jannah) பாதுகாப்பதாக குர்ர்-ஆன் கூறுகிறது. இங்கு எரிந்து கொண்டு இருக்கும் நரகமும், மிக கடுமையான குளிருடன் கூடிய நரகமும் என, 2 விதமான நரகங்கள் கூறபடுகிறது. மிகவும் மோசமானவர்கள் குளிர் நரகத்துக்கு செல்வதாக நம்ப படுகிறது (ஜில்லுனு ஒரு நரகம்???).

அடுத்து, இந்து மதத்தை அலச முயன்றேன். இதற்கு "கருட புராணம்" உதவியாக இருக்கும் என முதலில் அந்நூலை படிக்க தொடங்கினேன். இந்நூல், கருட பகவானின் கேள்விகளுக்கு, மஹா விஷ்ணுவே நேரடியாக பதிலை அளிப்பதாக, வியாச மாமுனி அவர்களின் சீடர்களுக்கு உரைத்த புராணம் என அறிந்தேன். "அந்நியன்" படத்திற்கு பிறகு, கருட புராணத்தை பற்றி தெரியாதவர்களும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை கண்டிப்பாக பெற்றிருக்க கூடும், என்னை போல். இந்த புராணம், எவை பாவங்கள் என்றும் அதற்கு ஏற்ற தண்டனைகளையும் விளக்குவதாக உள்ளது. மேலும், எமதர்மன், சித்திர குப்தன், விசித்திர குப்தன், எம தூதர்கள், தேவ தூதர்கள் போன்ற சில கதாபாத்திரங்களையும் நமக்கு அறிமுக படுத்துகிறது. மேலும் எமன், சித்திர குப்தன், விசித்திர குப்தன் போன்ற ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி படுத்தும் வேள்விகள், தானங்கள் போன்றவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் துர் மரணம் அடைந்த உயிர்கள், நரகத்தேயே அடையும் என்றும், புண்ணியம் செய்தவர்கள் தேவ தூதர்களால் அழைத்து செல்ல படுவார்கள் என்றும், பாவம் செய்தவர்கள் எம தூதர்களால் அடித்து இழுத்து செல்ல படுவதாகவும் படித்தேன். நரகத்தில் கொடுக்க படுவதாக சொல்லப்படும் தண்டனைகள், கண்டிப்பாக யாரையும் பயமுறுத்தி விட கூடியவைகளாக உள்ளன. உதாரணமாக, பாவம் செய்தவர்கள் கிட்ட தட்ட ஒரு வருடம் வரையிலும் எம லோகத்திற்கு இழுத்து செல்ல படுவதாகவும், "பிண்டம்" என அந்த உயிருக்கு படைக்க படும் உணவை உண்டு அதன் மூலம் சிறுது சிறிதாக உடலை அடைந்து பின் எம லோகத்தை அடைவதாகவும், அதன் பின் அந்த கட்டுண்ட உடலுக்கே தண்டனைகள் கொடுப்பதாகவும் படித்தேன். இழுத்து செல்லும் வழி எங்கும், சில நரகங்களுக்கு உள்ளே அனுமதித்து அங்கே அவர்கள் சாப்பிட நேரம் ஒதுக்க படுவதாகவும், எம லோகத்தின் நுழைவு இடத்தில மிகவும் கொடிய துர்-நாற்றமுடைய ஆறு ஒன்றை கடக்க சொல்வாதகவும் படித்தேன். அதன் பின்னரே அவர்களின் உண்மையான தண்டனைகள் அவனுக்கு வழங்க படுகிறது. இவ்வாறு கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் என்னை ஆச்சர்யத்துக்கு உண்டாக்கியது, சொல்ல போனால் அதிர்ச்சிக்கு உண்டாக்கியது. இவை கற்பனைகளே என கொண்டாலும், இத்தனை கற்பனைகளுக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

புத்த மதமும், "எமன்" எனும் அரசனை கொண்டு மொத்தம் 10 அரசர்களால் "நரகம்" ஆள படுவதாக கூறுகிறது. மேலும் தேவர்கள், அசுரர்கள் போன்ற கருத்துகளும் இதில் உண்டு. எனவே புத்த மதமும் இந்து மதத்தின் சாரத்தேயே கூறுவதாக எடுத்து கொள்ளலாம்.

விவேகானந்தர், மரணத்தினை வித்தியாசமாக அலச முயன்றிருப்பதாக, அவரின் "மரணுத்துக்கு பின்னால்" என்ற புத்தகம் மூலம் உணர்ந்தேன். அவர் உடலையே மையாமாக கொண்ட மதங்களையும் (எகிப்து பகுதிகளில் இன்றளவும் உடல் உள்ளவரை மட்டுமே உயிர் இருக்கும் என்ற கருத்தினை மையமாக கொண்டு "Mummy" எனும் உடலை பாதுகாக்கும் முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளனர்), உயிரையே (ஆத்மாவை) மையமாக கொண்ட மதங்களையும் அவர் ஆராய்கிறார். அவர் உடலை மையமாக கொண்ட மதங்கள் கூறும் விசயங்களில் உடன்பாடு இல்லாத நிலையை வெளிபடுத்தியும், மோட்சம் (முக்தி) என்ற ஒரு நிலைக்கே எல்லா உயிர்களும் பாடு படுகின்றன என்றும் அதில் விளக்கி உள்ளார். மேலும் கடவுளை அடையும், அதாவது கடவுளுடன் ஒன்றிணைதல் என்ற நிலை யோகங்களின் மூலம் பெறலாம் என்றும் கூறுகிறார். இதற்கு எல்லாம் அடித்தளமான  "பகவத் கீதை" யை அறிய அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.

அங்கு ஆத்மாவுக்கு அழிவே இல்லை. அது என்று முக்தி நிலையை அடைகிறதோ அப்போது தான், மறு பிறவியில் இருந்து விடுதலை அடைகிறது. அதுவே ஒவ்வொரு உயிரின் இறுதி கட்ட குறிக்கோள் என்றும், மனித பிறவியே எல்லா பிறவியை விடவும் உயர்ந்தது எனவும் அறிவுரை படுத்தபட்டேன். முக்தி நிலை, இறைவனில் இரண்டற கலக்கும் நிலை எனும் கருத்தை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னரே பகவான் கிருஷ்ணர் கூறியிருப்பதையும், இங்கே கூறப்பட்ட விஷயங்கள் தான் மெருகேற்ற பட்டு பிற மதங்களில் (மற்ற மகா புருஷர்களால்) கூற பட்டிருக்கலாம் என எண்ண தோன்றியது. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராம கிருஷ்ண பரமஹம்சர் கூட இதே கருத்துகளையே செப்பனிடுவதாக தோன்றியது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அடைய தகுந்த உயர் நிலை என்பதே எல்லா மதத்தின் கருத்தாக எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணர் "நானே அதை அடைய ஒரே வழி" என்றும் கிறிஸ்துவும் "நானே உன் பாவங்களை போக்கி முழு நிலை அளிப்பேன்" என்றும், புத்தர், மகாவீரர், நபிகள் நாயகம் என எல்லோரும் இதையே (அடிப்படை) கூறுவதாக தோன்றியது.

இவ்வாறு சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு, பிறப்பும் இறப்பும் எதை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என கருத்துகளை மையமிட முயன்றேன். இதில் மையமாக கீழ் தந்த கருத்துகளை பார்க்கிறேன்.

"ஆத்மா"என்றும் மாசு படாத, அதாவது கரை படாத மற்றும் ஆக்கமும் அழிவும் இல்லாத நிலை. செய்த பாவங்கள், புண்ணியங்களை பொருத்து "ஆத்மா" அதன் அடுத்த உடலை தேர்ந்து எடுக்கிறது. அல்லது பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுபடுகிறது."ஆசை"யே அழிவுக்கு காரணம். ஆசையை கட்டுப்படுத்தியவன் எதற்கும் அடிமை அல்ல. அவன்
விரைவிலேயே பிறவி கடலின், கரையை காண்கிறான்.

இந்த குறுகிய கால ஆராய்ச்சிகள், இந்த தேடலில் கண்டிப்பாக முழு பதிலை தராது என உணர்ந்தேன். என் பார்வையில் மரணம் கூட ஒரு முடிவு அல்ல என்பது போன்ற எண்ணம் சற்றே தோன்றலாயிற்று. தற்கொலை செய்து கொள்பவர்கள், கண்டிப்பாக ஒரு இழிவான நிலையை மரணத்துக்கு அடுத்து பெறுவார்கள் என கிட்டத்தட்ட எல்லா மதமும் சொல்கின்றன. மரணம் எப்படி ஒரு பிரிவை, உறவினர்களுக்கு தருகிறதோ, அதே போன்று உடலை பிரிந்த ஆத்மாவும், பிரிவினையை உணருமா? இதற்கு இந்து மதத்தின் புனித நூலான "பகவத் கீதை", ஆத்மா எந்த பந்தங்களிலும் சிக்காது, ஆனால் பந்தங்களே இல்லாத வாழ்க்கை வாழும் வரை, விடுதலை அடைவதில்லை, என்பது போன்ற கருத்துகளை கொடுக்கிறது. உடல் ஒரு சட்டை க்கு ஒப்பிடப்படுகிறது. உயிர் மறு பிறவியின் மூலம் மற்றொரு சட்டையை மாட்டி கொள்கிறது. சட்டை கிழிந்ததை உடலுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூற முடியாது. அது போல் உடல் பிரிந்ததை உயிரின் இழப்பு என்று கூற முடியாது என்பது தான் மைய கருத்து.

இது போன்ற ஆன்ம ரீதியான படிப்புகள், மனிதனை கண்டிப்பாக தவறுகள் செய்யும் போது எச்சரிக்கும் அற்புதமான நண்பர்கள். வாழ்க்கை, இறந்ததும் முடிந்து விடுகின்றது, எனவே இருக்கும் வரை "தவறுகள்" செய்தாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் படியான நிலை, என்னை சற்று உறுத்தவே செய்தது.

எல்லா உயிர்களுமே ஒரே மாதிரியான ஆத்மாக்களை கொண்டதானால், "வைரஸ்" போன்ற  நுண்ணுயிரிகளும் மனிதனுக்கு ஒப்பிட தகுந்த உயிர்களே. கருட புராணம், 3 வகையான உயிர்களை பற்றி குறிப்பிடுகிறது. "குட்டிகள் ஈன்பவை", "முட்டைகள் மூலம் உயிர்ப்பவை", "வியர்வைகள் மூலம் (அல்லது இறந்த பொருளின் மூலம்) ஜனிப்பவை" என்பவை அவை மூன்றும். இதில் கிருமிகள் மூன்றாம் வகையை சேர்ந்தவையாக கொள்ளலாம். எனவே தன் தகுதிக்கு (பாவ, புண்ணியங்களுக்கு) ஏற்ப, ஆத்மா தேர்ந்தெடுத்த ஜனனங்கள் தான் எல்லாம் என எடுத்து கொள்ளலாம்.

இந்த சிறிய ஆராய்ச்சி எனக்கு மட்டும் அல்ல, படிக்கும் உங்களிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!!!. "பணம்", "பதவி", "புகழ்", "பங்களா", "மது", "மாது" என ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்ட நம்மை, "மரணம்" தன் சாட்டையால் அடித்து "நிலையானதை நீ தேடவில்லை" என்று கூறுகிறது.

"மரணம்" - எல்லோருக்கும் உண்டு. ஏன், பிரம்ம பகவானே மரணத்தை உடையவன் என்று வேதங்கள் கூறுகின்றன. மரணத்திற்கு அடுத்து ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பியாவது, தவறுகள் செய்வதை குறைப்போம். பிற உயிர்களுக்கும் முடிந்த வரை நன்மைகள் செய்து அதில் ஆத்மசுகம் காண்போம். (Atleast Try பண்ணுவோம் பாஸ்)...

3 comments:

  1. நல்ல பகிர்வு. நானும் நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் வெளியில் தேடாமல் என்னுள்ளேயே என் ஆராய்ச்சியை செய்துக்கொண்டிருக்கிறேன். மரணம் என்பது இன்றும் நம்மை பயமுறுத்தும் ஒரு விஷயமாகவே இருக்கிறதேயன்றி அது முக்திக்கான இன்னொரு வாசல் என்பதை நாமும் மறக்கிறோம்.. அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. நன்று.
    ஓர் ஆன்ம ஆராய்ச்சி.

    ReplyDelete
  3. நன்று.
    ஓர் அழிவற்ற ஆத்மா பெற வேண்டிய நிலை குறித்த ஆய்வு.

    ReplyDelete

Search This Blog